விக்கிரவாண்டி, ஜன. 23: விக்கிரவாண்டி டோல்கேட் அலுவலக வளாகத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகழ்ச்சி நடந்தது. விக்கிரவாண்டி டோல்கேட், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், விக்கிரவாண்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டோல்கேட் மேலாளர் முத்து அண்ணாமலை, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், பிஆர்ஓ ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி வரவேற்றார். இதில் சாலையில் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் பொது பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களும் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் முத்துக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ரமணி, பாபு உட்பட டோல்கேட் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.