×

பாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்

மேல்மலையனூர், ஜன. 23:   விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட கடலி ஊராட்சியில் நீலாம்பூண்டி பகுதி மக்களுக்காக தனியாக அங்கன்வாடி மையம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடலி  அங்கன்வாடி மையம் துவக்க முதலே 1975ம் ஆண்டு கட்டப்பட்ட வானொலி கட்டிடத்தில் குழந்தைகள் அமர்ந்து பாடம் கற்கும் அவலம் தொடர்கதையாகியுள்ளது. தமிழக அரசு குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேல்மலையனூர் தாலுகாவுக்குட்பட்ட தமிழக அரசு ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடலி அங்கன்வாடி மையத்தில் 5 வயது வரை உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்து வருகின்றனர். இந்த மையத்தில் பாதுகாக்கப்படும் குழந்தைகளுக்கு போதிய கட்டிட வசதி இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் தொட்டியின் நிழலில் விளையாட்டு பொருட்களை கொடுத்து விளையாட வைக்கின்றனர்.

 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசால் கிராமங்கள் தோறும் தகவல் பரிமாற்றத்திற்காக கட்டப்பட்ட வானொலி அறையை இன்றளவும் இக்கிராமத்தில் அங்கன்வாடி சமையலறை கூடமாக உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிதளவே பரப்பை கொண்ட வானொலி கூடத்தில் உணவு தானியபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலால் குழந்தைப் பருவத்தில் உள்ள இளம்  மலர்கள் வெயிலிலும், மழையிலும் பல வருடங்களாக அவதியுற்று வருகின்றனர். இதனை வந்து பார்வையிடும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது வேதனைக்குரியது.   மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கன்வாடி மையத்தை பலமுறை பார்வையிட்டும் மாணவர்களை பாதுகாப்பற்ற சூழலிலுள்ள குழந்தைகளின் நிலையறிந்து பாதுகாப்பான ஒரு கட்டிடத்திற்குள் கற்கும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சிறுபிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

Tags : center ,radio building ,
× RELATED தொழில் மையத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு