திருவெண்ணெய்நல்லூர், ஜன. 23: திருவெண்ணெய்நல்லூரில் பள்ளி மரிமாற்ற திட்டத்தின் கீழ் பள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று அங்குள்ள கற்றல், கற்பித்தல் முறைகளை தெரிந்து கொண்டனர். திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் காலை அதே ஊரில் உள்ள காந்தி நினைவு அரசு உதவிபெறும் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த பள்ளியின் மாணவர் கற்றல் முறைகளையும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளை பற்றியும் நேரில் பார்வையிட்டனர். காலை 9 மணிக்கு சென்ற மாணவர்கள் மதியம் வரை அரசு உதவிபெறும் பள்ளியின் நிலைகளை பற்றி பார்வையிட்டனர். அதை தொடர்ந்து மதியம் தீயணைப்பு நிலையத்திற்கு மாணவர்களை அழைத்து சென்று அவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
அதில் தீ பிடித்தால் அதை எவ்வாறு எளிய வழியில் அணைப்பது மற்றும் குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் விழுந்தால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, அதில் காயமடைந்தவர்களை பாதுகாப்பாக எப்படி தூக்கி செல்வது, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான செய்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சிவங்கரன், நிலைய அலுவலர் சுந்தரராஜன், மேற்பார்வையாளர் பத்மாவதி, ஆசிரியர்கள் தீபா, ஆனந்தன், யுகபதி, ரத்தினவேலு உள்பட பலர் உடனிருந்தனர்.