வைகுண்டம், ஜன.23: திருச்செந்தூர் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கான டெலிபோன் கட்டணம் கடந்த ஜூன் மாதம் வரை மொத்தமாக செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், தனித்தனி தொலைபேசி எண்களுக்கு டெலிபோன் கட்டணம் செலுத்தப்படவில்லை என கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் டெலிபோன் சேவையை பிஎஸ்என்எல் நிர்வாகம் துண்டித்தது. 4 மாதங்களாக பொது மக்களும் பயணிகளும் அவதியுற்று வந்தனர். பொதுமக்களின் நலன்கருதி ரயில் நிலையங்களில் தொலைபேசி இணைப்புகள் உடனடியாக சரிசெய்யபட வேண்டும் என தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் ஜெயபாலன் கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கை குறித்து தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, 4 மாதங்களுக்கு பின்னர் நேற்று திருச்செந்தூர் வழித்தட ரயில் நிலையங்களில் மீண்டும் தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.