தூத்துக்குடி கல்லூரியில் சந்தை கண்காட்சி கலெக்டர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, ஜன.23: தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மகளிர் திட்டத்தின் சார்பில் நடந்த கல்லூரி சந்தையை கலெக்டர் சந்தீப்நந்தூரி துவக்கி வைத்தார். தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் திட்டத்தின் மூலம் கல்லூரி சந்தை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நடந்தது. விழாவில் கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கல்லூரி சந்தை கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார். தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பல்வேறு உற்பத்தி பொருட்கள் தயார் செய்யப்பட்டு அவற்றை சந்தைப்படுத்தும் விதமாக கல்லூரி சந்தை கண்காட்சி ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு மகளிரின் பங்கு மிகவும் அவசியமானது ஆகும். முன்பு நமது மதம் மற்றும் கலாசார அடிப்படையில் பெண்களின் முன்னேற்றம் தடைபட்டு இருந்தது.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் மகளிர்கள் ஆண்களுக்கு சரிநிகராக பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் சுய தொழில்கள் மூலம் முன்னேற்றம் அடைந்து சொந்த காலில் நிற்கும் வகையில் மகளிர் திட்டத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகளிர் குழுக்கள் மூலம் தயார் செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் படிக்கும் போதே குறிக்கோள்களை வளர்த்துக்கொண்டு பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டு சுயமாக சொந்த காலில் நிற்கும் வகையில் வேலைவாய்ப்பு அல்லது தொழில்களை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார். கல்லூரி சந்தையில், 35 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பனை ஒலை பொருட்கள், செயற்கை நகை தயாரித்தல், மண்பாண்டம், பூ வகைகள், பொம்மை வகைகள், ஊதுபத்தி, ஊறுகாய் வகைகள், சணல் பை, செருப்பு வகைகள், மரப்பொருள், பஞ்சு பொம்மைகள், கீ செயின், துணி வகைகள், வாட்ச், டெரகோட்டா அன்டிக் பொருட்கள், பர்ஸ், பேக் போன்றவைகள் கண்காட்சி மற்றும் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், காளான் சூப், கஞ்சி, பால் கொழுக்கட்டை, பானி பூரி, திணை, முறுக்கு, கம்பு முறுக்கு, நாட்டுச்சர்க்கரை லட்டு, கடலை உருண்டை, ஜீஸ், புட்டு, தேன், மிளகு, முந்திரி பருப்பு, பயிறு வகைகள், தேங்காய் உணவுப்பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி தொடர்ந்து 3 நாள் நடக்கிறது. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி, தூய மரியன்னை கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், உதவி திட்ட அலுவலர்கள் பிரேமா, பாலசுந்தரம் மற்றும் அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: