கன்னியாகுமரி, ஜன.23: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் சபரிமலை சீசன் தொடங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகை கால தொடர் விடுமுறைகளும் வந்ததால் கன்னியாகுமரியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் முடிந்து விட்டது. இதனால் கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை முற்றிலும் குறைந்து விட்டது. அதோடு விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது. அவ்வப்போது சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்து செல்கின்றனர். இதனால் கன்னியாகுமரி களை இழந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் பலத்த காற்று வீசியது. சுமார் 40 கிலோ மீட்டர் அளவுக்கு வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம் படகு சேவையை ரத்து செய்தது. இதனால் காலையில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பலத்த காற்று வீசுவது நின்றால் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மாலை வரை காற்றின் வேகம் குறையாததால் படகு சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.