தா.பேட்டை, ஜன.22: தா.பேட்டை கடைவீதியில் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வோர் மீதும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், சிசிடிவி கேமராவை காவல்துறை சார்பாக பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி தாலுகா தா.பேட்டை கடைவீதி நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் வாகனங்களும் துறையூர் பகுதியில் இருந்து நாமக்கல் நோக்கி செல்லும் வாகனங்களும் முசிறியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களும் இச்சாலைகளில் அதிகம் பயணிக்கின்றது. நாமக்கல் மெயின் ரோடு கடைவீதியில் குறுக்கிடுவதால் இரவு நேரங்களிலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து இருப்பது வழக்கம். எனவே சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் கனரக வாகனங்களையும், இருசக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும், காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா வைப்பது அவசியம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.