கடலூர், ஜன. 22: கடலூர் வேணுகோபாலபுரம் வரதம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு இன்ஸ்பயர் அவார்ட்ஸ்மானக் அறிவியல் கண்காட்சியில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் 5 விதமான கருத்தாக்கங்கள் பெறப்படுகின்றன. அதில், சிறந்த கருத்தாக்கங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான காட்சியமைப்புகள் செய்வதற்காக ஒவ்வொரு கருத்தாக்கத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் லியோனர்டு ஜானி முன்னிலை வகித்தார். காட்சி பொருட்களை மத்திய அரசின் பிரதிநிதியாக கோமதி, மெரின்டயானா ஆகியோர் மதிப்பீடு செய்தனர்.இதில் முதல் பரிசாக ஒரு படைப்பும், இரண்டாம் பரிசாக 2ம், மூன்றாம் பரிசாக 3ம் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் மாநில அளவிலான தேர்விற்காக பிப்ரவரியில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கப்படும். அதன்பின்னர் மண்டல அளவிலான தேர்விலும், தேசிய அளவிலான தேர்விலும் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று தலைமையாசிரியர் தெரிவித்தார்.