கடலூர், ஜன. 22: கடலூர் மாவட்டத்திலுள்ள 683 கிராம ஊராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களுக்கு இன்று (22ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு ஒருநாள் அறிமுக பயிற்சிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரே நேரத்தில் கடலூர் நகர அரங்கிலும், கடலூர் காவலர் திருமண மண்டபத்திலும் இந்த பயிற்சி முகாம் நடக்கிறது. இது தொடர்பாக ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி கூட்டம் இன்று தொடங்குகிறது. அதன்படி கடலூர் அண்ணாகிராமம் பண்ருட்டி ஒன்றியங்களை சேர்ந்த 114 ஊராட்சிகளில் உள்ள தலைவர்களுக்கும், துணைத் தலைவர்களுக்கும் இன்று (22ம் தேதி) கடலூர் காவலர் திருமண மண்டபத்திலும், கம்மாபுரம் குமராட்சி காட்டுமன்னார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 120 ஊராட்சிகளில் உள்ள தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு கடலூர் டவுன்ஹாலில் பயிற்சி நடக்கிறது.
நாளை (23ம் தேதி) பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல் புவனகிரி ஒன்றியங்களைச் சேர்ந்த 112 ஊராட்சிகளில் உள்ள தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு காவலர் திருமண மண்டபத்திலும் அதேநாள் காட்டுமன்னார்கோவில், முஷ்ணம், விருத்தாசலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 116 ஊராட்சிகளில் உள்ள தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு டவுன்ஹாலில் பயிற்சி நடக்கிறது. நாளை மறுநாள் (24ம் தேதி) மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 93 ஊராட்சிகளில் உள்ள தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு கடலூர் காவலர் திருமண மண்டபத்திலும், நல்லூர், மங்களூர் ஒன்றியங்களை சேர்ந்த 130 ஊராட்சிகளில் உள்ள தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கும் கடலூர் டவுன்ஹாலில் பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.