விழுப்புரம், ஜன. 22: வரும் 24ம் தேதி நடைபெறும் அமாவாசை திருவிழாவை யொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் வரும் 24ம் தேதி நடைபெறும் அமாவாசை திருவிழாவையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசுகையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும். போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் இரண்டு நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் திருக்கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் கோயில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டுமென கூறினார். கூட்டத்தில் கூடுதல்ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ஜோதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.