அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்

புதுச்சேரி, ஜன. 22:  புதுச்சேரியில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பதவி உயர்வு, பணிநிரந்தரம், நிலுவை ஊதியம், 7வது ஊதியக்குழு சம்பள பரிந்துரை உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில், 2 நாள் தொடர் தர்ணாவில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.  அதன்படி நேற்று ஜென்மராக்கினி மாதா கோயில் எதிரே செயின்ட் ஆன்ழ் வீதியில் தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத் தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். சம்மேளன நிர்வாகிகள் பாலமோகனன், பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் தாட்சாயிணி, லலிதா, முருகவேணி, சுமதி, ஜான்சி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் 60க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.  மாலைக்குள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிடில் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டத்தை இன்றும் தொடர முடிவு செய்துள்ளனர். இருப்பினும் அங்கன்வாடி மையங்களில் உதவியாளர்கள் பணியில் இருப்பதால் அங்கு பணிகள் பாதிக்கப்படவில்லை.

Related Stories: