வள்ளியூர், ஜன.22: நெல்லை- கன்னியாகுமரி சாலையில் வள்ளியூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளால் பாலம் பலமிழந்து வருவதோடு விபத்து அபாயம் நிலவுகிறது. இவை முழுமையாக அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நான்குவழி விரைவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை-மதுரை மற்றும் நெல்லை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைகளில் பல மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல மேம்பாலங்களில் பக்கவாட்டு பகுதிகளில் திடீர் மரக்கன்றுகள் முளைக்கின்றன. சில இடங்களில் பெரிய அளவில் மரக்கன்றுகள் வளர்ந்து நிற்கின்றன. சில இடங்களில் அகற்றினாலும் அங்கு மீண்டும் மரக்கன்றுகள் தழைக்கின்றன. குறிப்பாக வள்ளியூர்- கன்னியாகுமரி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் முறையான பராமரியபின்றி பலமிழந்து வருகிறது. வள்ளியூரிலிருந்து நாகர்கோவில் கன்னியாகுமரி செல்லும் பஸ்கள், தொழிற்சாலைகளுக்கான கன்டெய்னர் லாரிகள் வாகனங்கள் என தினமும் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன.