அண்ணாநகர்: சென்னை நெற்குன்றத்தில் வருமான வரி துறை அதிகாரி மற்றும் போலீஸ் என்று கூறி 3 லட்சம், 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டனர். சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், பல்லவன் நகர், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முகமது நூருல்லா (65). பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு இவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் கும்பலில் 2 பேர் சபாரி உடையிலும், 2 பேர் போலீஸ் சீருடையிலும் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அடையாள அட்டையை காட்டி வருமான வரித்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் என கூறியுள்ளனர். அப்போது அவர்கள், ‘‘நீங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்ததுள்ளது. உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும்’’ என்று கூறி அவர்களிடமிருந்த செல்போன்களை பறித்தனர். மேலும் பீரோவில் இருந்த ₹3 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 10 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்து போட்டு பெற்று கொள்ளுமாறு கூறிவிட்டு அவசர அவசரமாக சென்றுவிட்டனர். அவர்கள் மீது முகமது நூருல்லாவுக்கு சந்தேகம் எழுந்ததால் கோயம்பேடு போலீசில் புகாரளித்தார். விசாரணையில் வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை என்பது உறுதியானது.