×

பெரம்பூர் மதுரை சாமி மடம் தெருவில் விளையாட்டு திடலில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட 68வது வார்டு மதுரை சாமி மடம் சாலை பகுதியில் விளையாட்டு திடல் உள்ளது. இந்த வழியாக செல்லும் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி விளையாட்டுத் திடல் முழுவதும் பரவி குளம்போல தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள வீடுகளுக்கு படையெடுப்பதால் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் மர்ம காய்ச்சலும் பரவி வருகிறது.

இந்த விளையாட்டு திடல் அருகிலேயே மழலையர் பள்ளி, உருது பேசும் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மழலையர் பள்ளி அருகாமையிலேயே குளம்போல கழிவுநீர் தேங்கி உள்ளதால் அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கழிவுநீர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாநகராட்சி விளையாட்டு திடலை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : game ,Perambur Madurai Sami Madam Street ,
× RELATED வெற்றியை தொடருமா ராஜஸ்தான்? குஜராத்துடன் இன்று மோதல்