கோவை, ஜன.22: உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு உலக பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் கிளாஸ் ஷ்வாப் உற்சாக வரவேற்பு அளித்தார். உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் 50ம் ஆண்டு பொருளாதார உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நேற்று துவங்கி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் அரசியல், வணிகம், கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த தலைவர்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இதில் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தினமும் காலை தியான வகுப்பை நடத்துகிறார். அம்மாநாட்டில் கர்நாடக மாநில அரசின் பெவிலியன் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சத்குரு பங்கேற்றார். இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உலக பொருளாதார கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.