குடியிருப்பு பகுதிக்குள் பிடிபட்ட 4 அடி நீள உடும்பு

கோவை,ஜன.22: கோவை அருகே சின்னதடாகம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 4 அடி நீளமுள்ள உடும்பு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை சுமார் 694 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. மலைத்தொடர் மற்றும் அதனையொட்டி பகுதியில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, கழுதைப்புலி, மான், மலபார் அணில், உடும்பு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார கிராமங்களுக்குள் வருவது தொடர் நிகழ்வாக உள்ளது.

இந்நிலையில் நேற்று சின்ன தடாகம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உடும்பு செல்வதை கண்ட அப்பகுதி மக்கள் அதை இலாவகமாக பிடித்தனர். பிடிபட்ட உடும்பை அருகில் உள்ள மின்கம்பத்தில் கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் உடும்பை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். பிடிபட்ட உடும்பை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.

Related Stories: