ஈரோடு, ஜன.22: ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரங்களில் ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை தாக்கி வந்த வெள்ளை ஈக்கள் தற்போது, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சத்தியமங்கலம், நம்பியூர், அரச்சலூர், கோபி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை தாக்கி வருகிறது. ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன் ஈக்களினால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் கரும்பூஞ்சாணமாக ஓலைகளில் கருப்பு நிறமாக மாறிவிடுகின்றன.இதனால், தென்னைகளில் மகசூல் பாதியாக குறைந்துவிடுவதாகவும், குறிப்பாக தேங்காய் போதிய வளர்ச்சி இன்றி சிறிய அளவில் உள்ளதாகவும் விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இதையடுத்து, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் பிரபாகர் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா, துணை இயக்குநர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.