டீசல் தீர்ந்ததால் திருடிய வாகனத்தை சாலையோரம் நிறுத்தி சென்ற திருடர்கள்

சத்தியமங்கலம், ஜன.22: புஞ்சைபுளியம்பட்டி ஜவகர் மெயின் ரோடு அரசு தொடக்கப்ள்ளி எதிரே வசித்து வருபவர் ரவி (48). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு உறங்க சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வாகனத்தை தேடி வந்தனர். இந்நிலையில், புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர் புஞ்சைபுளியம்பட்டியில் காணாமல் போன வாகனம் கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள இடுகம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்ததை பார்த்து ரவிக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது மினி லாரியில் டீசல் தீர்ந்து போனது தெரியவந்தது. மேலும், வாகனத்தை திருடிச் சென்றவர்கள், டீசல் தீர்ந்ததால் சாலையோரம் நிறுத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை மீட்ட போலீசார், ரவியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: