×

உள்ளாட்சி தேர்தல் விரோதம் கோஷ்டி மோதலில் வாலிபர் வயிறு கிழிப்பு ஊராட்சிமன்ற பெண் தலைவிக்கு வலை

ஊத்துக்கோட்டை, ஜன. 22:  ஊத்துக்கோட்டை அருகே உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் வயிறு கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவி உள்பட  6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் அமுதா. அதே பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.  இவர்கள் இருவரும் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில், அமுதா வெற்றி பெற்றார். இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் சசிகுமாரின் ஆதரவாளர் நீலமேகம் என்பவர் அமுதாவின் மகன் ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர்  சமாதானம் பேசி நீலமேகத்தை அங்கிருந்து அனப்பி வைத்தனர். அதன்பிறகு அமுதாவின் மற்றொரு மகன் அரவிந்தன் வந்தார். அவர், நீ எப்படி  என் அண்ணனை தகாத வார்த்தைகளால்  திட்டலாம்? என நீலமேகத்திடம் தகராறு செய்துள்ளார். இதையறிந்த சசிகுமார், தனது ஆதரவாளர்கள் ரஞ்சித்குமார் (25), அருணகிரி அவரது மகன் ஞானமூர்த்தி, லட்சுமணன், திருமூர்த்தி ஆகியோருடன் வந்தார். அதே நேரத்தில் அரவிந்தனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் ஆனந்தன், உறவினர்கள் நீலநாதன், மது, தாயாரும் ஊராட்சி மன்ற தலைவியுமான அமுதா ஆகியோரும் திரண்டனர்.

ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் உருட்டு கட்டை போன்ற  ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில், ரஞ்சித்குமாரின் வயிறு கிழிந்தது.  நீலமேகத்தின் பைக் உடைக்கப்பட்டது. அந்த பகுதி போர்க்களம்போல் மாறியது. தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்,  எஸ்.ஐ.ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்தனர். இரு தரப்பை சேர்ந்த 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதற்கிடையே இருதரப்பினரும் தனித்தனியாக ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  அதன்பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்கு பதிந்து இருதரப்பையும் சேர்ந்த அரவிந்தன் (27), ஆனந்தன் (32), நீலநாதன் என்ற சேட்டு (39), அருணகிரி (48),  அவரது மகன் ஞானமூர்த்தி (20), லட்சுமணன் (30) ஆகிய 6 பேரையும் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான ஊராட்சி மன்ற தலைவி அமுதா, உறவினர் மது, சசிகுமார், திருமூர்த்தி, ரஞ்சித்குமார், நீலமேகம் ஆகிய 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதில், வயிற்றில் கத்தியால் கிழிக்கப்பட்ட ரஞ்சித்குமார் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

Tags : election hostilities clash ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...