×

விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆளில்லா தானியங்கி ஊர்தி போட்டி

திருப்போரூர், ஜன.22: செவ்வாய் கிரக பயணங்களுக்கு செல்லும் அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் இன்டர்நேஷனல் ரோவர் சேலஞ்ச் எனப்படும் சர்வதேச ஆளில்லா தானியங்கி ஊர்தி வடிவமைப்பு போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 4 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில்  இந்தியா, வங்கதேசம், போலந்து உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் போலந்து நாட்டின் க்ராக்கோ நகரத்தில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக அணி முதல் பரிசை வென்று சாதனை படைத்தது. இதற்கான விருது மற்றும் ₹50 ஆயிரம் பரிசை ஹூண்டாய் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் செந்தில்குமார் வழங்கினார். மேலும் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர்களும் ஆறுதல் பரிசு பெற்றனர். சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் வளர்ந்து வரும் சிறப்புக்குழு என்ற பரிசை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக இணை துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : International Unmanned Automotive Contest ,VIT University ,
× RELATED தினகரன் நாளிதழ்- விஐடி பல்கலைக்கழகம்...