×

திடீர் தீயில் கருகி கரும்பு தோட்டம் நாசம்

திருக்கழுக்குன்றம், ஜன.22: திருக்கழுக்குன்றம் அருகே அறுவடைக்கு தயாராக தோட்டத்தில் இருந்த கரும்புகள்  திடீர் என தீப்பற்றி எரிந்து நாசமானது.
திருக்கழுக்குன்றம் தாலுகா இரும்புலிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (58). விவசாயி. இவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்புகள் நன்றாக வளர்ந்து, ஓரிரு நாட்களில் அறுவடை செய்ய தயராக இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நாகராஜின் கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால், தீ மளமளவென கரும்பு தோட்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க போராடினர். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து, திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரும்பு தோட்டம் தீயில் கருகி நாசமானது. இதில் ₹2.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புகாரின்படி திருக்கழுக்குன்றம் போலீசார், கரும்பு தோட்டத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது, நாச வேலை காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Karunai Sugarcane Plantation ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...