பல் டாக்டர் வீட்டில் கொள்ளை சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

சேலம், ஜன.22: சேலத்தில் பல் டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அழகாபுரம் காட்டூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (30). இவரது மனைவி திவ்யா (27). கணவன்-மனைவி இருவரும் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக உள்ளனர். திவ்யாவின் பெற்றோர், மும்பையில் வசித்து வருகின்றனர். இவர்களை பார்க்க மும்பை சென்ற தம்பதியினர், நேற்று முன்தினம் காலை சேலம் திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 12 பவுன் நகை, ₹10 ஆயிரம் பணம், வெள்ளி காசுகள், லேப்டாப் மற்றும் கேமரா ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கணவன்-மனைவி இருவரும் கடந்த 13ம் தேதி மும்பைக்கு கிளம்பினர். தொடர்ந்து ஒருவாரமாக வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பின்பக்கமாக வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட தெரு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், கடந்த ஒருவாரமாக அங்கு வந்து சென்றவர்கள், உலாவிய சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட கைரேகை பதிவுகளை, பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தும் விசாரிக்கின்றனர்.

Related Stories: