சேலம், ஜன.22: சேலத்தில் பல் டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அழகாபுரம் காட்டூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (30). இவரது மனைவி திவ்யா (27). கணவன்-மனைவி இருவரும் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக உள்ளனர். திவ்யாவின் பெற்றோர், மும்பையில் வசித்து வருகின்றனர். இவர்களை பார்க்க மும்பை சென்ற தம்பதியினர், நேற்று முன்தினம் காலை சேலம் திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 12 பவுன் நகை, ₹10 ஆயிரம் பணம், வெள்ளி காசுகள், லேப்டாப் மற்றும் கேமரா ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.