புதுக்கோட்டை, ஜன.22 : புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி கடன் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் நூறுநாள் திட்ட ஊதியத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வங்கி நிர்வாகம் பிடித்து கொள்வதால், குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் உள்ளனர். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி கடந்த 2009ம் ஆண்டு இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு உயர்கல்வி படிக்க விரும்பிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்க முன்னுரிமை அளித்தது.
இதனால் மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று விதிமுறைகளின்படி கல்வி கடன் பெற்றனர். குறிப்பாக பொறியியல் மாணவர்கள் அதிக அளவில் கல்வி கடன் பெற்று படித்தனர். இதனால் கிராமங்களில் பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2009,2010ம் ஆண்டுகளில் பொறியாளர்களின் தேவை அதிகரித்து வண்ணம் இருந்தது. குறிப்பாக ஐடி துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க வங்களின் வீழ்ச்சி அந்த நாட்டின் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக உலக நாடுகளின் பொருளாதரமும் வீழ்ச்சி ஏற்பட்டு இந்திய பொருளாதாரத்தையும் பாதித்தது. இந்திய ஐடி துறை சுமார் 80 சதவீம் வீழ்ச்சியடைந்தது. இதனால் பெரிய நிறுவனங்கள் பணியாளர்களை வெளியேற்றியது. இதை தொர்ந்து வேலை இழப்பு ஏற்பட்டது. வங்கியில் கடன் வாங்கி படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படிப்பை முடித்து வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கிடைத்த வேலையை குறைந்த சம்பளத்திற்கு குடும்ப சூழ்நிலை காரணமாக பணியாற்றினர்.
இந்த பணியில் கிடைக்கும் ஊதியம் குடும்பத்தில் ஏற்படும் செலவை கூட சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வங்கிகள் கடனை வசூலிக்க பல திட்டங்களை செயல்படுத்தினர். இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மாணவர்கள் தற்கொலை செய்ய தொடங்கினர். இதனையடுத்து அரசு கல்வி கடன் வசூலை கட்டாயப்படுத்த கூடாது என்று அறிவித்தது. ஆனால் வங்களிகள் மட்டும் பல வழிமுறைகளை கையாண்டு கல்வி கடன் வசூலை செய்து வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி நிர்வாங்கள் பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் மன உளைச்சலில் வாழ்ந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.