×

போலீசார் இல்லாத நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று செல்லும் பேருந்துகள்

கரூர், ஜன. 22: போக்குவரத்து கூண்டில் போலீசார் இல்லாத சமயங்களில் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று செல்வது குறித்து கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மனோகரா கார்னர் பகுதியில் நான்கு வழிகளில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதில் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல், தாந்தோணிமலை, மணப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், பழைய திண்டுக்கல் சாலையில் செல்கிறது.இந்த தடத்தின் வழியாக ஏராளமான மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் சென்று வருகின்றன. நான்கு ரோடுகள் சந்திக்கும் இந்த இடத்தில் சில பேருந்துகளும், மினி பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில், ஒரு மாதத்துக்கு முன்பு மனோகரா கார்னர் சந்திப்பு பகுதியின் எதிரே டிராபிக் கூண்டு அமைக்கப்பட்டு போலீசார் அதில் நின்று கண்காணித்து, அத்துமீறி நிற்கும் பேருந்துகளை மைக் மூலம் அறிவிப்பு செய்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் டிராபிக் கூண்டில் போலீசார் இல்லாத சமயங்களில் பெரும்பாலான வாகனங்கள் திரும்பவும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...