லால்குடி அருகே காயங்களுடன் வாய்க்காலில் முதியவர் சடலம் மீட்பு

லால்குடி, ஜன.21: லால்குடி அருகே பெருவளநல்லூர் புள்ளம்பாடி வாய்க்காலில் உடம்பில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர் உடலை போலீசார் கைப்பற்றி கொலை செய்யப்பட்டு சடலத்தை வாய்க்காலில் வீசியுள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் வடக்கு புதுகாலனியை சேர்ந்தவர் பெரியசாமி (74). அதே பகுதியில் பெரியசாமி சைக்கிள் மற்றும் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் இவர் பெருவளநல்லூர் வடக்கே உள்ள புள்ளம்பாடி வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார். வெகுநேரமாகியும் பெரியசாமி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உடலை தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் புள்ளம்பாடி அருகே வந்தலை கூடலூர் பகுதியில் புள்ளம்பாடி வாய்க்காலில் ஆண் சடலம் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற பெரியசாமி குடும்பத்தினர் உடலை மீட்டனர். அப்போது அவரது உடலில் மூன்று இடங்களில் வெட்டு காயங்கள் இருப்பதும், மர்மமான முறையில் பெரியசாமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த திருச்சி எஸ்பி ஜியாவுல்ஹக், டிஎஸ்பி ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெரியசாமிக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: