ஓமலூர், ஜன.21: ஓமலூர் சரபங்கா ஆற்றில் கழிவுநீர் கலந்து பச்சை நிறமாக மாறிய தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக பெய்த மழையின் காரணமாக, சரபங்கா ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளிலும், தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நீரை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கிராம பொதுமக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் தேங்கி, கடந்த ஒரு மாதமாக தண்ணீரின் மேற்பரப்பில் பச்சை நிறத்தில் மாறி கடும் நாற்றம் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் தயங்குகின்றனர். மேலும், கோட்டைமாரியம்மன்கோயில் பகுதியில் தண்ணீர் முழுமையாக மாசடைந்துள்ளது.