×

புதுக்கோட்டையில் தொல்லியல் கழக மாநாடு ஜூலையில் நடக்கிறது

புதுக்கோட்டை, ஜன.21: தொல்லியல் கழகத்தின் 30வது மாநாடு புதுக்கோட்டையில் வரும் ஜூலை மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது.
தமிழக அளவில் தொல்லியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பழமையான அமைப்பான தொல்லியல் கழகம் தனது 30ஆவது மாநாட்டை புதுக்கோட்டையில் வரும் ஜூலை மாதம் நடத்துகிறது. இரு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்தும் தொல்லியல் ஆர்வலர்கள், மாவட்டங்களில் செயல்படும் தொல்லியல் அமைப்புகளின் நிர்வாகிகள்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல் செயல்பாட்டாளர்கள் பங்கேற்கிறார்கள். ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி ராஜாமுகம்மது, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த மாநாட்டுக்கான வரவேற்புக் குழு அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மருத்துவர் ராம்தாஸ், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி ராஜாமுகம்மது ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான வரவேற்புக் குழுவுக்கு டாக்டர் ராம்தாஸ் தலைமையில் 100 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மாநாட்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொல்லியல் வரலாற்றுத் தொன்மங்கள் குறித்த விரிவான கட்டுரைகளைக் கொண்ட மலர் ஒன்றைத் தயாரித்து வெளியிட முடிவு செய்யப்பட்டு, இதற்கான குழு அமைக்கப்பட்டது.

மேலும், மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான போதிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக இயற்கை விவசாயி தனபதி தலைமையில் நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது. மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகளையும், கல்வெட்டுப் பயிற்சியும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன், பேராசிரியர் விஸ்வநாதன், தொல்லியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags : conference ,Archaeological Society ,Pudukkottai ,
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு: குழு அமைத்து ஆணை