பொதுப்பணித்துறை அலட்சியத்தால் புழல் ஏரி நீர் மாசடையும் அவலம்

* கழிவு நீர், கழிவுகள் கொட்டுகின்றனர்

* பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

ஆவடி: டன் கணக்கில் கொட்டப்பட்டு வரும் குப்பை, இறைச்சி கழிவுகள், கலக்கும் கழிவுநீரால் புழல் ஏரி தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் நோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரியும் முக்கிய  பங்கு வகிக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியாகும். 20.86 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை பொதுப்பணி துறை பராமரித்து வருகிறது. புழல் ஏரியின் கரை செங்குன்றம், புழல், சூரப்பட்டு, சண்முகபுரம், முருகாம்பேடு, கள்ளிக்குப்பம், பானுநகர், வெங்கடேஸ்வரா நகர் விரிவு, திருமுல்லைவாயல், அரிக்கம்பேடு, பொத்தூர் வரை நீண்டுள்ளது. புழல் ஏரி தண்ணீரை புழல் மற்றும் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.

இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், புழல் ஏரி சமிபகாலமாக செங்குன்றம், அம்பத்தூர், புழல் ஆகிய பகுதிகளில் கழிப்பிடமாக மாறியிருக்கிறது. மேலும், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலர் ஏரிக்கரையில் மலம், சிறுநீர் கழிக்கின்றனர். இவையெல்லாம் ஏரி நீரில் கலந்து விடுகிறது. குறிப்பாக, ஏரியில் தண்ணீர் இருக்கும் போது கள்ளிக்குப்பம், முகாம்பேடு, சூரப்பட்டு, அரிக்கம்பேடு, லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏரியில் நான்கு, இரண்டு சக்கர வாகனங்களை கழுவுவது, மாடுகளை குளிப்பாட்டுவது, துணி துவைத்து குளிக்கின்றனர்.

மேலும், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர், பானு நகர், பழனிப்பா நகர், கிழக்கு பானு நகர், மேற்கு பானு நகர் மற்றும் திருமுல்லைவாயல் ஆகிய பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழை நீர் கால்வாய் மூலம் ஏரியில் கொண்டுவிடப்படுகிறது. மேலும், புழல் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஏரியில் கலக்கின்றன. இப்படிப்பட்ட செயல்களால் ஏரி மாசடைந்து வருகிறது. சமீப காலமாக கட்டிட இடிபாடுகள், இறைச்சி கழிவுகள், வீட்டு குப்பைகள், வெட்டிய தென்னை மரங்கள், இளநீர் ஓடுகள், கரும்பு கழிவுகள் உள்ளிட்டவைகளை புழல் ஏரியில் கொட்டப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களும் குப்பைகளை திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள புழல் ஏரியில், கொட்டி வருகின்றனர்.

மேலும், திருமுல்லைவாயில் வெங்கடாச்சலம் நகர் பகுதியில் ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கால்வாய் கட்டி சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவரும் செப்டிக் டேங்க் தண்ணீர் மற்றும் கழிவு நீரும் ஏரியில் தான் கலக்கிறது. இவ்வாறு, ஏரியில் கழிவுகளை டன் கணக்கில் கொட்டி உள்ளனர். இதனால் ஏரி நீர் மாசடைவதுடன் விஷத்தன்மையாக மாறும் அபாயம் உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் சென்னை மக்கள், பல்வேறு விதமான நோய்களால் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சமுக விரோதிகள் தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனை அகற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

* வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புழல் ஏரியில் கழிவுநீர் விடுதல், இறைச்சி கழிவுகள், வாகனங்களை கழுவுதல், துணி துவைத்து குளிப்பது, இயற்கை உபாதைகளை கழிப்பது போன்றவைகளால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இந்த தண்ணீரை சுத்திகரித்து கொடுத்தாலும் மக்களுக்கு பல விதமான உடல் உபாதைகளும் ஏற்பட்டு வருகின்றன. மேற்கண்ட செயல்களை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்றனர்.

Related Stories: