தோசை மாவில் ரேஷன் அரிசி கலப்பதில் தகராறு கழுத்து நெரித்து மனைவியை கொன்ற கணவன் கைது: கிண்டி அருகே பரபரப்பு

ஆலந்தூர்: தோசை மாவில் ரேஷன் அரிசி கலப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த கணவனை போலீசார் கைது செய்தனர். கிண்டி மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் பிரசாத் (35). இவரது மனைவி உஷா (30). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவரும் அதே பகுதியில் தோசை மாவு விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி ஆந்திராவில் வசிக்கும் உஷாவின் சகோதரி நளினி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனை எடுத்த பிரசாத், உஷா தூங்குவதாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் நளினி போன் செய்துள்ளார். அப்போது, உஷாவின் செல்போனை எடுத்த ஒருவர், உஷாவிற்கு உடம்பு சரியில்லாததால் மடுவின்கரையில் இருப்பதாகவும், அவரது கணவர் குழந்தையுடன் சித்தூர் சென்றுவிட்டதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த நளினி, உஷா வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்துள்ளார். அதன் பிறகுதான் உஷா வீட்டில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து சித்தூரில் உள்ள நளினிக்கு பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார். இதையடுத்து உஷாவின் உறவினர்கள் கிண்டி போலீசில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சித்தூரில் பதுங்கியிருந்த பிரசாத்தை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கணவனும், மனைவியும் தோசை மாவு விற்கும் தொழில் செய்து வந்தனர். “மாவில் ரேஷன் அரிசி கலக்கலாம்” என மனைவி கூறியுள்ளார்.

அதற்கு பிரசாத், “ரேஷன் பொருள் கலந்தால் நமது பெயர் கெட்டுவிடும்” என கூறியுள்ளார். இதனால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பிரசாத், மனைவி உஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குழந்தையுடன் சித்தூர் சென்றுள்ளார் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், பிரசாத்திடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: