மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற தாய், மகன் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திலகவதி (35) நிறைமாத கர்ப்பிணி. இவர்களது மகன் திருமுருகன் (4) கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறான். இந்நிலையில், பள்ளியில் விடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக திலகவதி அழைத்து சென்றார். புதிய கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையை தாயும், மகனும் கடக்க முயன்றனர். அப்போது, அதிவேகத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.