×

காஞ்சிபுரம் அருகே பரபரப்பு திமுக பிரமுகர் மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 5 பேர் சுற்றி வளைத்து கைது

காஞ்சிபுரம், ஜன.21: காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் திமுக பிரமுகர் மகனுக்கு, முன் விரோத தகராறில், சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். திமுக பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகன் மணிரத்னம் (31). நேற்று முன்தினம் இரவு மணிரத்னம், திம்மசமுத்திரம் கிராம குளக்கரை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது 3 பைக்கில் வந்த 6 பேர், மணிரத்தினத்தை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில், நிலைகுலைந்த அவர், அலறி கூச்சலிட்டபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அலறி கூச்சலிட்டனர். உடனே, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து படுகாமடைந்த மணிரத்னத்தை, பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், காணும் பொங்கல் அன்று திம்மசமுத்திரம் கிராமத்தில் நடந்த பார்வேட்டை உற்சவத்தில், மணிரத்னத்துக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த ராமு (25), மணி (24), வேலு (29), சரவணன் (23), ஜெகன் (25) ஆகியோர், மணிரத்னத்தை தாக்கியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த 5 பேரையும், சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Tags : Kanchipuram ,
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்