வேலூர், ஜன.21: பைப் லைன் புதைத்த பின்னர் சாலைகளை சீரமைக்காததால் சலவன்பேட்டை, வேலப்பாடி பகுதிகள் வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். வேலூர் சேண்பாக்கம் மற்றும் விரிஞ்சிபுரம் பகுதியில் இருந்து வேலூர் சாஸ்திரி நகர் பகுதிகளுக்கு இரண்டு அரசு டவுன் பஸ்கள் பில்டர்பெட் ரோடு, ஓல்டு டவுன், குட்டை மேடு, வேலப்பாடி வழியாக சென்று வந்தன. இதன் மூலம் அப்பகுதிகளை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இந்நிலையில், சலவன்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய குடிநீர் பைப் லைன்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி முடிந்தவுடன் சாலைகளை சீரமைக்காததால், குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியாக அரசு டவுன் பஸ்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் அரசு போக்குவரத்துக்கழகம் அவ்வழியாக சென்று வந்த இரண்டு டவுன் பஸ்களின் சேவையையும் நிறுத்தி வைத்துள்ளது.