சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி

திருப்பூர், ஜன. 21: திருப்பூரில், 31வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி நேற்று நடந்தது.  திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று 31வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன பேரணி நடந்தது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பில் ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 31வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முதல் 27ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. முதல் நாளான நேற்று திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் திருப்பூர் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. இப்பேரணியானது பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது.  இப்பேரணியில் போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாரயணன் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: