திருப்பூர், ஜன. 21: திருப்பூர் மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல பிரிவு அலுவலகம் முன்பு பொது மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சலை அடுத்த எஸ்.ஆர்.வி.நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் சீராக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எஸ்.ஆர்.வி.நகர் பெண்கள் உள்பட பொதுமக்கள் காலிகுடங்களுடன் மா.கம்யூ. கிளை செயலாளர் சந்திரன் தலைமையில் நேற்று காலை பூலுவப்பட்டி அருகே உள்ள 2ம் மண்டல 5வது பிரிவு அலுவலகத்திற்கு முன்பு கொடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மா.கம்யூ. ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிகாமணி, மகாலிங்கம், பானுமதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற 2ம் மண்டல சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் கொடுத்தனர்.