×

வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

கோவை, ஜன.21: கோவையில் வட்டார போக்குவரத்துதுறை சார்பில் சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் 31வது சாலை போக்குவரத்து வார விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இதனை மாவட்ட கலெக்டர் ராசாமணி துவக்கி வைத்தார். பேரணியில் 500க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் பங்கேற்றனர். இந்த பேரணி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி அவினாசி சாலை, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, காந்திபுரம் வழியாக வ.ஊ.சி மைதானத்தில் நிறைவடைந்தது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் சாலைகளில் சாகசம் வேண்டாம், மித வேகம் மிக நன்று, தலைக்கவசம் உயிர்க்கவசம் போன்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியில் காவல்துறையினர், அதி விரைவு படை, அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சுமித் சரண், மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா, லாரி உரிமையாளர் சங்க தலைவர் கலிய பெருமாள், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல், தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : awareness rally ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி