தொண்டாமுத்தூர்,ஜன.21: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஓவ்வு பெறும் போது அவர்களுக்கு அரசு ஊழியர்களை போல பணிக்கொடை வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி அன்று பணிகொடை சட்ட விதிகளின்படி கோயிலில் பணியாற்றுவோருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 25 பேர் தங்களுக்கும் பணிக்கொடை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் பணிக்கொடை வழங்க தாமதமானால் வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என பணிக்கொடை சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வட்டியுடன் பணிக்கொடையை சேர்த்து வழங்க வேண்டும் என விண்ணப்பம் அளித்தனர். இதில் 3 பேருக்கு மட்டுமே கடந்த மாதம் பணிக்கொடை வட்டியுடன் வழங்கப்பட்டது. இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் முன்பாக அவர்களுக்கான காசோலை வழங்கப்பட்டது.