மருதமலை கோயில் நிர்வாகம் வட்டியுடன் சேர்த்து பணிக்கொடை வழங்க வேண்டும்

தொண்டாமுத்தூர்,ஜன.21:  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஓவ்வு பெறும் போது அவர்களுக்கு அரசு ஊழியர்களை போல பணிக்கொடை வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி அன்று பணிகொடை சட்ட விதிகளின்படி கோயிலில் பணியாற்றுவோருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 25 பேர் தங்களுக்கும் பணிக்கொடை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் பணிக்கொடை வழங்க தாமதமானால்  வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என பணிக்கொடை சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வட்டியுடன் பணிக்கொடையை சேர்த்து வழங்க வேண்டும் என விண்ணப்பம் அளித்தனர். இதில் 3 பேருக்கு மட்டுமே கடந்த மாதம் பணிக்கொடை வட்டியுடன் வழங்கப்பட்டது.  இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் முன்பாக அவர்களுக்கான காசோலை வழங்கப்பட்டது.

மற்றவர்களுக்கு விரைவில் பணிக்கொடை மட்டும் வழங்குவதாக உறுதி அளித்தனர். வட்டியுடன் தரும்படி ஓய்வு பெற்ற ஊழியர்கள் கோரிக்கை விடுத்த போது, அவர்களின் கோரிக்கையை கோயில் அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அறநிலையத்துறை ஆணையர் பணிக்கொடை வழங்க உத்தரவிட்டிருந்தும் மருதமலை கோயில் துணை ஆணையர் பணிக்கொடை வழங்க மறுப்பதாக ஓய்வுபெற்ற கோயில் ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வயதான காலத்தில் வட்டியுடன் சேர்த்து பணிக்கொடையை வழங்கிட கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: