வீட்டுமனை கேட்டு மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

மொடக்குறிச்சி, ஜன.21: கணபதிபாளையம் இந்திராகாந்திபுரத்தில் வீட்டுமனை பட்டா வழங்கியும் இடம் ஒதுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கல்லுக்குழி என்ற பகுதியில் 83 குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தன. இப்பகுதி குளத்தின் கரையில் இருந்ததால் அந்த குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இந்திராகாந்திபுரம் என்ற பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கடந்த 2010ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. இதில், 6 குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகள் பழனிசாமி என்பவரின் விவசாய நிலத்தை ஒட்டி இருந்ததால் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கு வீட்டுமனை ஒதுக்கப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகட்ட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி நேற்று கணபதிபாளையத்தில் ஈரோடு -கரூர் ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Related Stories: