குறைதீர்க்கும் கூட்டத்தில் 169 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு, ஜன.21: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர், சாலை வசதிகள் மற்றும் அடிப்படை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 169 மனுக்கள் பெறப்பட்டன.பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் கதிரவன் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதிநாள் முகாம் மனுக்கள், மக்களை தேடி வருவாய்த்துறை திட்ட முகாம்கள் உள்ளிட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் குறித்தும், அந்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கலெக்டரின் விருப்பகொடை நிதியில் இருந்து 2 பயனாளிகளுக்கு 11,130 ரூபாய் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: