ஈரோடு, ஜன. 20: ஈரோடு வெட்டுக்காட்டுவலசு விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகானந்தம் (47). இவர் ஈரோடு கருவூலத்துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகுணா கோவையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டி விட்டு உடுமலைப்பேட்டை அருகே கல்லாபுரம் கிராமத்திற்கு சென்று விட்டனர். பின்னர் 17ம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணம், மேலும் பைக்கையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து சண்முகானந்தம் வீரப்பன்சத்திரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.