×

வண்டிப்பண்ணையில் அடிப்படை வசதிகளுடன் நிரந்தர பஸ்நிலையம் அமைக்க சதுரகிரி பக்தர்கள் கோரிக்கை

வத்திராயிருப்பு, ஜன. 20: சதுரகிரி கோயிலுக்கு செல்ல வசதியாக தாணிப்பாறை அருகே, வண்டிப்பண்ணையில் நிரந்தர பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்தை விட 4,500 அடி உயரத்தில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசை பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இவ்விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

ஆடி அமாவாசை திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். திருவிழாவின்போது வண்டிப்பண்ணையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்படும். இங்கு போதுமான அடிப்படை வசதி செய்து தராததால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாவர்.
இக்கோயிலுக்கு தொலைதூர ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். வண்டிப்பண்ணையில் நிரந்தர பஸ்நிலையம் கட்டினால் குளியல் அறை, கழிப்பறைகள், தங்கும் அறை போன்ற வசதி செய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் ஏராளமாக இருப்பதால் இதனை கையகப்படுத்தி நிரந்தர பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pilgrims ,Chathuragiri ,bus stand ,car park ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை