விருதுநகர், ஜன. 20: விருதுநகரில் அடிப்படை வசதி கேட்டு, கலெக்டர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகரில் காந்திபுரம் தெரு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் காரில் ஏறி கலெக்டர் புறப்பட முயன்றபோது, அப்பகுதி பொதுமக்கள் காரை மறித்து முற்றுகையிட்டனர். உடனே காரில் இருந்து இறங்கிய கலெக்டர் பொதுமக்களிடம் விசாரித்தார்.
அப்போது காந்திபுரம் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். உடனே அப்பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர், ‘உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.