×

சிவகங்கை மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ‘டமால்’

சாலைகளில் எரிக்கப்படும் குப்பைகள்சிவகங்கை, ஜன.20: சிவகங்கை மாவட்டத்தில் குப்பைகளை மறு சுழற்சி செய்வதற்காக தொடங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம் பயனற்ற நிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள் மற்றும் 12 பேரூராட்சிகளிலும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகர் பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்திற்கு கொண்டு சென்று அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்கும், மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கவும் பயன்படுத்த வேண்டும். இந்த உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் இப்படி உரம் தயாரிக்கப்படுவதே விவசாயிகளுக்கு தெரியாது. இதனால் தயாரிக்கப்பட்ட உரங்களும் மீண்டும் குப்பைகளுக்கு வந்துவிடுகிறது. மாவட்ட அளவில் இத்திட்டம் பெயரளவிலேயே உள்ளதால் நகர் பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பும் பெயரளவிலேயே உள்ளது. சேகரிக்கப்படாத பாலித்தீன் பைகள் காற்றில் பறந்து சீமைக்கருவேல மரங்கள் முழுவதும் படர்ந்து காணப்படுவதால் பல இடங்கள் பாலித்தீன் காடுகளாக உள்ளன. நகரங்கள், கிராமங்களில் கோழிக்கழிவுகள் ஊருக்கு எல்கையில் கொட்டப்படுகின்றன. இவைகள் எப்போதும் அப்புறப்படுத்தப்படுவதே இல்லை. நகர் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் ஊருக்கு எல்கையில் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் மையங்களில் கொட்டி வைக்கப்படுகின்றன.

Tags : Sivaganga District ,
× RELATED தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்