×

அறுவடை மும்முரமாக இருந்தாலும் செங்குத்தாக பறக்கும் சிறுதானிய விலை

தேனி, ஜன. 20: தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அறுவடை தொடங்கினாலும் சிறுதானியங்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் அறுவடை தொடங்கி உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் சிறுதானியங்களின் அறுவடை நடந்து வருகிறது. இருப்பினும் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறுதானியங்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.நேற்று தேனி மார்க்கெட்டில் சாப்பிட தகுந்த அளவு தயாரான உளுந்து கிலோ 125 ரூபாய், கேழ்வரகு கிலோ 40 ரூபாய், சாப்பாட்டு சோளம் கிலோ 50 ரூபாய், சிகப்பு சோளம் 30 ரூபாய், கம்பு 36 ரூபாய், வரகு 90 ரூபாய், சாமை 88 ரூபாய், குதிரைவாலி 86 ரூபாய், தினை 78 ரூபாய் என விற்கப்படுகிறது. ஆனால் வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே வாங்குகின்றனர்.

இருப்பினும் மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலை நல்ல முறையில் கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர். இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் வரத்து இருக்கும். ஆனாலும், இதற்கு முந்தைய ஆண்டுகளில் விளைச்சல் இல்லாததால், பழைய சிறு தானியங்களின் இருப்பு இல்லை. தற்போது வியாபாரிகள் இருப்பு வைக்க அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். எனவே, இந்த ஆண்டு விலை குறைய வாய்ப்புகள் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை