தூத்துக்குடி,ஜன.20: தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றப்படாததால் தெப்பக்குளமாக மாறியுள்ளது. பாசிபடர்ந்து சுகாதார கேடாக இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. தூத்துக்குடியில் கடந்த மாதம் இறுதி வரையில் பெய்த பருவமழை மற்றும் புயல் மழை காரணமாக 2000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த வெள்ள நீரை இன்று வரையில் பெரும்பாலான பகுதிகளில் அகற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் ஸ்டேட்பாங்க் காலனி, தனசேகரன்நகர், ராஜகோபால்நகர், கதிர்வேல்நகர், ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சூழ்ந்து நிற்கிறது. வீடுகளை சுற்றிலும் வெள்ள நீர் உள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகமும் கைவிட்ட நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து வெள்ள நீரை அகற்றியுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. முக்கியமாக தனசேகரன் நகர் பகுதிகளில் உள்ள பூங்காக்கள், தெருக்கள், குடியிருப்புகளில் இன்றும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. சுமார் 3 அடி ஆழம் வரையில் தேங்கியுள்ள இந்த வெள்ள நீரில் பாசிபடர்ந்து, நீர்த்தாவரங்கள் வளர்ந்து தெப்பக்குளங்கள் போல காணப்படுகிறது.