இடைப்பாடி, ஜன.20: இடைப்பாடி அருகே சின்னப்பம்பட்டியில் எருதாட்ட விழா கோலாகலமாக நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. பொங்கல் பண்டிகையையொட்டி, கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி சின்னப்பம்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நேற்று எருதாட்டம் நடந்தது. இந்த விழாவில் முனியம்பட்டி, அக்கரைபட்டி, பாப்பம்பாடி, எட்குட்டை மேடு, சின்னப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை கோயில் முன் நிறுத்தி பூசாரி பூஜை செய்து பொம்மை, ஆட்டு தோல் கட்டிவிட்டனர். இதன் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் திரண்டு காளைகளை அடக்க முயன்றனர். ஆனால் பிடிகொடுக்காத காளைகள் வீரர்களை இழுத்து சென்றது. இந்நிகழ்ச்சியை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.