கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி அடுத்த வரட்டனப்பள்ளியில் அகில உலக அய்யன் திருவள்ளுவர் நற்பணி இயக்கம் சார்பில் பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. கடந்த 15ம் தேதி காலை கோலப்போட்டி, மதியம் ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் நடந்தது. 16ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சாக்குபை ஓட்டம், மிதவேக சைக்கிள் போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் ஆகிய போட்டிகள் நடந்தது. 17ம் தேதி காலை பானை உடைத்தல், இசை நாற்காலி, நடனப் போட்டிகள் நடந்தது. இதில் ஏராளமான சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சாம்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் பிரித்திகா முருகேசன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் திருவள்ளுவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.