×

வரத்து அதிகரிப்பால் வெண்டை கிலோ ₹10க்கு விற்பனை

தர்மபுரி, ஜன.20: வரத்து அதிகரிப்பால், தர்மபுரி உழவர் சந்தையில் வெண்டை விலை சரிந்து, கிலோ ₹10க்கு விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் வறட்சியால் வெண்டையில் பூ பிடிப்பு குறைந்தது. பனி மற்றும் கடும் வெயிலால் செடிகள் கருகி வெண்டை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி 1ம் தேதி ஒரு கிலோ வெண்டை ₹22க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வெண்டை வரத்து அதிகரித்திருப்பதால் நேற்று கிலோ ₹8-₹10க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தோட்டக்கலை பயிர்களில் மிக முக்கிய பயிரான  வெண்டைக்கு சீசன் என்பதே இல்லை. எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு. அதிகம் விளையக்கூடிய நாட்களில் தேவை எங்கு இருக்கிறது என்பதை அறிந்து அந்த சந்தைக்கு அனுப்பி வைத்தால் முழு மகசூலையும் பணமாக்க இயலும். தற்போது வெண்டை வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து விட்டது. உழவர் சந்தைக்கு தினசரி ஒரு டன் வெண்டைக்காய் வருகிறது,’ என்றனர்.

Tags : arrival ,
× RELATED புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து சரிவு