திருவாரூர், ஜன. 20: அஞ்சலக பிரிப்பகத்தை மூட மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து திருவா ரூர் தலைமை தபால் நிலையம் வாயிலில் அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தபால் அலுவல கங்களையும், தபால் பிரிப்பு அலுவலகங்களையும் படிப்படியாக மூடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப் படையில் தமிழகத் தில் திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர் (திருப்பாபுலியூர்) உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வந்த அஞ்சல் பிரிப்பகங்கள் மூடப்பட்டு விட்டன. அதனை தொடர்ந்து திருவாரூரில் கடந்த 1972ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் துவக்கப்பட்ட பாரம்பரியமிக்க அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் தபால்கள் அனைத்தும் திருவாரூரில் வைத்து பிரிக்கப்பட்டு வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடைக்கோடி பகுதிகளுக்கும் சேவை அளித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு இந்த அலுவலகத்தை மூடி னால் கிராமப் புறங்களில் தபால் சேவை முற்றிலும் சீர்குலைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூர் அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மத்திய அரசு மூட முயற்சிப்பதை கைவிடக் கோரியும், மூடப்பட்டுள்ள திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர் (திருப்பாபுலியூர்) உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வந்த அஞ்சல் பிரிப்பகங்களை மீண்டும் திறந்திட வலியுறுத்தியும் அகில இந்திய ஆர்எம்எஸ், எம்எம்எஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் குரூப் சி யின் கிளையின் சார்பில் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் வாயில் முன்பு அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, ஆர்எம்எஸ் 3 ம் பிரிவு செயலாளர் நம்பி ஆனந்த் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்எம்எஸ் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் தர்மதாஸ், ஆர்எம்எஸ் 4ம் பிரிவு செயலாளர் சோமு, நாகை அஞ்சலக கோட்ட செயலாளர் விஜயராகவன், பகுதி நேர ஊழியர்கள் ஆகியோர் பேசினர்.