×

கீழ்வேளூர் -திருமருகல் மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்

நாகை, ஜன.20: கீழ்வேளூர் -திருமருகல் மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்வேளூரை அடுத்த கடம்பங்குடி, ஓர்குடி, மூங்கில்குடி, வெங்கிடங்கால், ஓக்கூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருட்களை வாங்க கடைத் தெருவிற்கு கீழ்வேளூர் வரவேண்டும். அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 6 ம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டும் என்றால் கீழ்வேளூர் தான் வர வேண்டும். இந்த பகுதி மக்களின் வசதிக்காக கீழ்வேளூரில் இருந்து திருமருகலுக்கு ஓர்குடி, மூங்கில்குடி, சோழங்கநல்லூர் வழியாக திருமருகலுக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. அதேபோல் அரசு பேருந்தும் இயங்கியது. இந் நிலையில் கீழ்வேளூர் -மூங்கில்குடி சாலை இரண்டு ஆண்டுகளாக பழுது ஏற்பட்டு வாகனங்கள் சென்று வர முடியாத நிலையில் சாலையை காரணம் காட்டி அரசு பேருந்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தும் போதிய வருமானம் இல்லை என்ற காரணம் காட்டி தனியார் மினி பேருந்தும் நிறுத்தப்பட்டது. தற்போது கீழ்வேளூர்-திருமருகல் மார்க்கத்தில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதி மக்கள் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்வேளூருக்கு நடந்தோ அல்லது ஆட்டோவை பயன்படுத்தி வந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் அதிக அளவில் ஏழைகள் வசித்து வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் கீழ்வேளூர்- மூங்கில்குடி வழியாக நாகை, திருவாரூருக்கு அரசு பேருந்து மீண்டும் இயக்க பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Keewalloor-Tirumurugal ,route ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...