திருப்பூர், ஜன. 19: இந்தியாவிலேயே தபால் டெலிவரியில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக தபால் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து தபால் துறை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இன்டர்நெட் சேவை அதிகரித்து வரும் நிலையில், தபால் சேவை இன்னும் உயிரோட்டமாக உள்ளது. தபால்களை டெலிவரி செய்யும் மாநிலங்களில், முதலிடத்தில், டில்லி 46 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்து வருகிறது. இரண்டாமிடத்தில் தமிழகம், 66 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்கிறது. கர்நாடகா - 74, மகாராஷ்டிரா - 84, மத்திய பிரதேசம் - 85 மணி நேரம் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தெலுங்கானா - 112, அசாம் - 118, ஆந்திரா - 121, ஜம்மு காஷ்மீர் - 122, ராஜஸ்தான் -134 மணி நேரம் என, கடைசி 5 இடங்களை பெற்றுள்ளன.
தற்போது டிஜிட்டல் கையடக்க கருவி, தபால்காரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு நாளில் தபால் டெலிவரி செய்யும் விவரங்களை மாலைக்குள், அந்தந்த தபால் நிலையங்களில் உள்ள கணினியில் தபால்காரர் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது கையடக்க கருவியிலே, அல்லது டெலிவரி செய்த இடத்தில் இருந்தே நேரடியாக பதிவேற்றப்படுவதால், நேரம் மிச்சமாகிறது, தபால்களை விரைவாக வழங்க வேண்டுமென தபால்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.